Published : 13 May 2025 04:56 PM
Last Updated : 13 May 2025 04:56 PM
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை தொகுத்து வழங்கினார் ஐஸ்வர்யா ரகுபதி. இந்தச் சந்திப்பின்போது, “இது கோடைக்காலம் என்பதால் அனைவரும் நிறைய தண்ணீர் குடியுங்கள்” என்று குறிப்பிட்டார். அப்போது நிருபர் ஒருவர் “நீங்கள் அணிந்திருக்கும் உடை வெயில் நேரத்துக்கு உகுந்தது தானா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “நீங்கள் கேட்கும் கேள்வி இங்கு சம்பந்தமில்லாதது” என்று குறிப்பிட்டார் ஐஸ்வர்யா ரகுபதி.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரகுபதி. அதில் “இன்றும் நம் சமூகத்தில் பல ஆண்கள் ஆண் என்கிற அகந்தையையும், ஆணாதிக்கத்தையும் தாங்கி நடப்பது மனதை உலுக்குகிறது. இன்னும் ஏமாற்றமளிப்பது என்னவென்றால், ஒரு நிருபர் போன்ற அறிவார்ந்தவர் அப்படி நடப்பதுதான்.
பல ஆண்டுகளாக, அறிவற்றவர்களிடம் இருந்து நிறைய தேவையற்ற கவனத்தைப் பெற்றிருக்கிறேன். அத்தகைய தருணங்களில், மேடையின் மாண்பைப் பேணுவதற்காக கோபத்துடன் பதிலளிப்பதா, அமைதியாக இருப்பதா என்று நான் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
அன்றைய தினம் நான் அமைதியாக இருக்க முடிவு செய்தேன். ஆனால் பின்னர், மனதில் பெரும் பாரமாக உணர்ந்தேன். சிறிது அழுது, என்னைத் தேற்றிக் கொண்டு மீதமுள்ள வேலைகளை முடிக்கத் திரும்பினேன். நேர்மையாகச் சொல்வதானால், நான் ஒரு பிரபலமாக என்னை உணர்ந்ததே இல்லை. ஊடக வாழ்வும், திரைப்பட உலக பிரவேசமும் எனக்குத் தற்செயலாக நிகழ்ந்தவை.
2018-ல் ஒரு செய்தி வாசிப்பாளராக இந்தத் துறையில் அடியெடுத்து வைத்தேன். திரைப்படங்கள், ஊடகங்கள் போன்ற பின்புலம் இல்லாமல், மக்களின் அகந்தைகளைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் அடியெடுத்து வைத்தேன். ஆனால், என் பயணம், என் அனுபவங்கள், என் கடின உழைப்பு ஆகியவை இன்று நான் யார் என்பதை வடிவமைத்துள்ளன.
நான் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சுயாதீனப் படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறேன். ஊடகத் துறைக்கு வரவிருக்கும் பெண்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு இருப்பதாக உண்மையாக உணர்கிறேன். ஒருவர் அவர் வாழ்வை வாழும் முறையைப் பார்த்து மக்கள் ஊக்கமடைய வேண்டும், வெறும் தோற்றத்தால் மட்டும் அல்ல என்பதை நான் நம்புகிறேன்.
நான் எப்போதும் மக்களை நேர்மறையாக இருக்கவும், கடினமாக உழைக்கவும், கருணையுடன் இருக்கவும் ஊக்குவிக்க விரும்பியிருக்கிறேன், மேலும் அவர்களுக்கு எவ்வாறேனும் உதவ முடிந்தால், அதுவே எனக்கு முழு திருப்தியைத் தரும்.
ஒரு கலைஞராக வளர்வதும், படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர்கள் மற்றும் குழுவினரிடமிருந்து பாராட்டு பெறுவதும் எனக்கு மிகவும் முக்கியம். மக்கள் என்னை நம்பும்போது, எனக்கு வழிகாட்டும்போது, என்னை நம்பிக்கையுடன் இருக்கத் தூண்டும்போது, அது உண்மையில் என்னை முன்னோக்கிச் செலுத்துகிறது.
இருப்பினும், வளர்ந்து வரும் நடிகையாக, சில பணப் பிரச்சினைகளை நானும் எதிர்கொள்கிறேன். அதனால்தான், நான் உண்மையாக நேசிக்கும், இந்தப் பயணத்தைத் தக்கவைக்க உதவும் வேலைகளைத் வேலையைத் தேர்ந்தெடுக்கிறேன்.
துரதிருஷ்டவசமாக, சில நேரங்களில், என் பொறுமையை கடுமையாக சோதிக்கும் சிலரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தாலும், நான் கடந்து செல்லும் ஒவ்வொரு சம்பவமும் என்னை வலிமையானவளாகவும், விவேகமானவளாகவும் மாற்றுகிறது.
மக்கள் என்னை அவர்கள் வீட்டுப் பெண்ணாகப் பார்க்கும்போது, அது உண்மையில் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அதுவே நான் பெறக்கூடிய மிகப்பெரிய பாராட்டு. எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், நண்பர்களே. நான் உங்களை எல்லாம் விரைவில் பெருமைப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். எப்போதும் ஆதரவளித்ததற்கு இதயத்தின் அடியாழத்திலிருந்து அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரகுபதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT