Last Updated : 28 Apr, 2025 07:05 PM

 

Published : 28 Apr 2025 07:05 PM
Last Updated : 28 Apr 2025 07:05 PM

பத்ம பூஷண் விருது பெற்றார் அஜித் குமார் - ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

புதுடெல்லி: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வையொட்டி, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறனர்.

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், தமிழகத்தை சேர்ந்த குருவாயூர் துரை.கே.தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), எம்.டி.ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்பா சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள். குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுவது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x