Last Updated : 25 Apr, 2025 10:36 PM

 

Published : 25 Apr 2025 10:36 PM
Last Updated : 25 Apr 2025 10:36 PM

காப்புரிமை வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு: பின்னணி என்ன?

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’ பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிளாசிகல் பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘வீரா ராஜ வீரா’ பாடல் தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜஹீருதீன் தாகர் இருவரும் சேர்ந்து இயற்றிய ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் வாசிஃபுதீன் தாகர் கூறியிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அந்த பாடலை பயன்படுத்துவதை தடுக்கவும், தனக்கு இழப்பீடு வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரதீபா சிங் இன்று தீர்ப்பு வழங்கினார். 'வீர ராஜா வீர' பாடல் சில மாற்றங்களுடன் 'சிவ ஸ்துதி' பாடலின் இசையை அடிப்படையாகக் கொண்டோ அல்லது அதிலிருந்து ஈர்க்கப்பட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் நீதிமன்ற பதிவாளரிடம் ரூ. 2 கோடி செலுத்தவும், மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் போது இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு, ‘சிவ ஸ்துதி’ என்பது துருபத் வகையை சேர்ந்த ஒரு பாரம்பரிய இசை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் ‘வீரா ராஜ வீரா’ பாடல், இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் மரபுகளுக்கு அப்பாற்பட்ட, 227 தனித்துவமான அடுக்குகளைக் கொண்ட மேற்கத்திய இசை அடிப்படைகளைப் பயன்படுத்தி இயற்றப்பட்ட ஒரு அசல் படைப்பு என்றும் வாதிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x