Published : 22 Apr 2025 09:59 AM
Last Updated : 22 Apr 2025 09:59 AM
‘ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை என இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் பேட்டி ஒன்றில் கார்த்தி சுப்பராஜ் அளித்த பேட்டியில், “இது ஒரு கேங்ஸ்டர் கதை அல்ல. முதல்முறையாக நான் ஒரு காதல் கதையை எடுக்கிறேன்.
என்னுடைய முந்தைய படங்களில் நான் காதல் உறவுகளை ஆராய்ந்திருக்கிறேன் என்றாலும் கூட, இதுதான் ஒரு முழுமையான காதல் கதையாக வந்திருக்கிறது. அதே நேரம் இதில் நிறைய ஆக்ஷனும் உண்டு. ஆனா இப்படம் ஒரு கேங்ஸ்டரை பற்றியது அல்ல. இந்தப் படத்தில் அதிகமாக காதல் உணர்வுகளை ஆராய்ந்திருக்கிறேன். அதனால்தான் இதனை முழுமையான காதல் படம் என்று சொல்கிறேன்.
நான் சூர்யாவை 2,3 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை சந்தித்தேன். ஆனால் அப்போது நான் அவருக்குச் சொன்னது வேறொரு கதை. அவருக்கும் அது பிடித்திருந்தது. ஆனால், அந்த நேரத்தில் நான் ‘மகான்’ படத்தில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு அவருக்கு சில பட கமிட்மென்ட்கள் இருந்தன.
பின்னர் நான் ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ படத்தை தொடங்கி விட்டேன். அதனை முடித்த பிறகு மீண்டும் சூர்யாவை சந்தித்தேன். நாங்கள் ஏற்கனவே பேசிய படத்துக்கு நிறைய முன் தயாரிப்பு வேலைகள் தேவைப்பட்டதால், அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம்.
என்னிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா என்று சூர்யா கேட்டார். அதுவரை அவர் செய்து வந்த கேரக்டர்களிலிருந்து விலகி ஏதாவது புதியதை முயற்சிக்க விரும்புவதாகப் பகிர்ந்து கொண்டார். ‘ரெட்ரோ’ கதையின் மையக்கரு அப்போதுதான் எனக்குள் தோன்றி இருந்தது. நான் அந்த யோசனையை முன்பே எழுதி வைத்திருந்தேன். அதை அவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
பின்னர் அவர் கொடுத்த ஒரு யோசனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதில் அதிகமான கமர்ஷியல் ஆக்ஷன் கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, பிரதான கதாபாத்திரத்தை மேலும் வலுவானதாக மாற்ற சூர்யா பரிந்துரைத்தார். எனக்கு அது பிடித்திருந்தது. கதையின் வேறொரு வடிவத்தை எழுதினேன். அதன் பிறகு நாங்கள் உடனடியாக படத்தை தொடங்கினோம்” என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT