Published : 21 Apr 2025 09:24 AM
Last Updated : 21 Apr 2025 09:24 AM
சக நடிகை ஒருவர் பொறுப்பற்ற முறையில் தன்னிடம் பேசியதாக நடிகை சிம்ரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சிம்ரன் பேசியது: “என்னுடைய சக நடிகை ஒருவருக்கு சமீபத்தில் மெசேஜ் செய்திருந்தேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் உங்களை பார்ப்பதில் ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறியிருந்தேன். உடனடியாக அவரிடம் இருந்து எனக்கு ரிப்ளை வந்தது. ‘ஆன்ட்டி’ கதாபாத்திரங்களில் நடிப்பதை விட இது பரவாயில்லை என்று கூறியிருந்தார். அப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை நான் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
நான் என்னுடைய கருத்தைத்தான் சொல்லியிருந்தேன். அவரிடமிருந்து இன்னும் நல்ல பதில் எனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆன்ட்டி ரோல்களில் நடிப்பது, 25 வயது பிள்ளைக்கு அம்மாவாக நடிப்பது ஒன்றும் தவறில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நான் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இது மேல் என்று எனக்கு தோன்றியது. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் நமக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்” என்று சிம்ரன் தெரிவித்தார்.
இதனையடுத்து சிம்ரன் குறிப்பிடும் அந்த நடிகை யார் என்பது குறித்து எக்ஸ் தளத்தில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது. பலரும் அந்த நடிகை ஜோதிகாவாக இருக்கலாம் என்று விமர்சித்து வருகின்றனர். காரணம், ஜோதிகா சமீபத்தில் இந்தியில் ‘டப்பா கார்டெல்’ என்னும் வெப் தொடரில் நடித்திருந்தார். அது தொடர்பான பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா துறையை விமர்சித்திருந்தார். இதனை வைத்து சிம்ரன் சொல்லும் அந்த நடிகை ஜோதிகாதான் என்று பலரும் கூறி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT