Published : 19 Apr 2025 08:17 PM
Last Updated : 19 Apr 2025 08:17 PM

உயிர்ப்பூவைத் திடுக்கென்று மலரச் செய்யும் 'புது வெள்ளை மழை' பாடல் | ரெட்ரோ ரஹ்மான் - 1

இருபதாம் நூற்றாண்டு விடைபெற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகளே மிச்சமிருந்தன. உலக நாடுகள் தங்கள் சந்தைகளை பிற நாடுகளுக்காகத் திறந்துவிட்டிருந்தன. அரசுத் துறைகள் தனியர் துறைகளின் பங்களிப்போடு வளர்ச்சியை நோக்கி சீறிப்பாய பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தன. வர்த்தகம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உலகமயமாக்கலுக்கான விதைகள் தூவப்பட்டன. இந்திய திரைத் துறை ஹாலிவுட் உடன் சினிமாத்தனங்களை தன் மீது பூசிக்கொள்ள ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தது. தமிழ்த் திரை இசை ரசிகர்களும் 15-16 ஆண்டுகளாகக் கட்டுண்டுக் கிடந்த இசையிலிருந்து வேறொரு இசைக்காக காத்திருந்தனர்.

சென்னை புதுப்பேட்டை மவுண்ட் சாலையில் இருக்கும் ஒரு வாடகை வீட்டின் 1967-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.50 மணி அது . பாட்டி மற்றும் தந்தை அருகிலிருக்க மருத்துவ துணையின்றி, வீட்டிலேயே பிறக்கிறது அந்த ஆண் குழந்தை. இனிப்புகள் வழங்கி தனது பிறப்பைக் கொண்டாடிய தந்தையின் மகிழ்ச்சியை பின்னாட்களில் அறிந்துக் கொள்கிறது அக்குழுந்தை. வயிற்றுப் பிரச்சினைகளால் 4 வயது வரை அவதியுற்று பலவீனமான குழந்தையாக இருந்ததை அம்மா சொல்ல தெரிந்து கொள்கிறது . அந்த அம்மாவுக்கு நெடுநாட்களுக்குப் பின்னர்தான் தெரிந்தது, தான் பெற்றது பலவீனமான குழந்தை அல்ல, இசை உலகை ஆட்டிப் படைக்கப்போகும் ஓர் இசைப்புயல் என்று!

90-களில் பூமிப்பந்தை உலகமயம் குட்டித் தீவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், திரையிசையைத் தன் கணினிக்குள் புகுத்தி வானளவச் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். தந்தையின் இசை ஞானம், பல இசையமைப்பாளர்களின் உதவியாளர், விளம்பரப் படங்களுக்கான இசையமைப்பவர் என்ற நிலைகளைக் கடந்து 25 வயதில், ‘ரோஜா’ (1992) படத்தில் இருந்து தொடங்கியது ரஹ்மானின் இசைப் பயணம். கவிதாலாயா தயாரிப்பு, மணிரத்னம் இயக்கம் என அவருடைய வருகையே கோலிவுட்டின் புருவங்களை உயர்த்திப் பார்க்க வைத்தது. திருவிழா மற்றும் சுப நிகழ்வுகளில் பாடல்கள் கேட்க ஹாரன் (கூம்புவடி ஒலிப்பெருக்கி) போதுமானது என்ற பலரது ஏகோபித்த மனநிலையை, ஸ்பீக்கர் பாக்ஸுக்கு மாறவேண்டியதன் அவசியத்தைக் கொண்டு வந்தது ரஹ்மானின் இசை.

ரஹ்மானின் வருகை இசைக் கருவிகளின் ஒலி வடிவங்களைத் துல்லியமாக்கியிருந்தன. இந்த ஒலியின் ஓசைகளைக் கேட்பது, பாடல் கேட்பவர்களுக்கு புதுமையான ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. பாடல் முழுக்க துரத்தாமல், அவ்வப்போது வந்த தாளக்கருவிகளின் நாதம் சிலிர்ப்பிக்கச் செய்தது. ‘யாருடா அந்த பையன்?’ என்று ஒட்டுமொத்த கோடம்பாக்கமும், 30-35 ஆண்டுகளுக்கு முன்பே வெறித்தனமாக தேடியது ஏ.ஆர்.ரஹ்மானைத்தான். காரணம், அவரது இசை வழக்கமானதாக இல்லை. பாடல்களுக்கான டெம்ப்ளேட்களில் இருந்து முரண்பட்டிருந்தது. இசைக்கான பொதுப்புத்திக்கு மீறல்கள் வளர்ச்சியென்பதை உரக்கச் சொல்லியிருந்தது.

‘ரோஜா’ படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. தமிழ் மற்றும் இந்தி மொழியில் 7 பாடல்களும், மலையாளம், தெலுங்கில் 6 பாடல்களும் இடம்பெற்றிருந்தன. இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இப்படத்தின் பாடல்கள், ‘டைம்’ இதழின் 10 ஆல்டைம் ஃபேவரைட் பாடல்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தூர்தர்ஷன் காலத்து பிளாக் அண்ட் ஒயிட் டிவியின் ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சியை மனத்திரைக்குள் கொண்டுவரும் பாடல்களில் இந்தப் படத்தில் வரும் ‘புது வெள்ளை மழை’ பாடலும் ஒன்று. வெயிலுக்கும், மழைக்கும் பழகியிருந்த நம்மை, பனிமலைக்குக் கடத்திச் செல்லும் பாடல் இது. பல்வேறு ஒலிகளின் கலை வடிவமே இசையென்பதை ரஹ்மான் டீட்டெய்லிங் செய்திருக்கும் விதமே அழகுதான்.

மிக அழுத்தமாக நகர்ந்து போய்க்கொண்டிருக்கும் பேஸ் கிட்டார் மேல், லீட் கிடார் ஒன்று ஓவர்லேப்ல வரும், பிறகு கீபோர்ட், அப்புறம் ரிதம், அதன்பிறகு கோரஸ் என பாடலின் தொடக்க இசையே அதுவரை நாம் கேட்டுணராத புதுமைகளைச் செய்திருக்கும். முதல் சரணத்துக்கு முன்வரும் ஸ்பேஸில், சிந்தசைஸர்ல வாசித்தது போல இருவேறு குழலிசை, கோரஸ், ரிதம் அப்புறம் கொஞ்சம் பெல்ஸ் அவ்வளவுதான் மிரள வைத்திருப்பார். அந்த கோரஸ் கேட்பதற்கு மந்திரங்கள் ஓதுவதுபோல இனிதாக இருக்கும்.

இந்த சிம்பிளிசிட்டியை செகன்ட் ஸ்டேன்சாவின் பேக்ரவுண்டலயும் கேட்கலாம். பேரிடோன் சாக்ஸ், ஃபுளூட், ரிதம், பெல்ஸ் கடைசியாக 5-6 விநாடிக்கு வெஸ்டர்ன் ஃபுளூட்டில் அற்புதமாக முடித்து பாடலைத் தொடங்கியிருக்கும். வைரமுத்துவின் வரிகளில் வந்த இந்தப் பாடலை சுஜாதாவும் உன்னிமேனனும் இணைந்துப் பாடி பனியில் உறைந்துப் போகச் செய்திருப்பர். இந்தப் படத்துக்கு முதன்முதலில் ரஹ்மான் கம்போஸ் செய்த பாடல் 'சின்ன சின்ன ஆசை' தான். ஆனாலும், ஒரு கம்போஸருக்கு முதல் டூயட் ரொம்பவே ஸ்பெஷல். அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மானின் 'புது வெள்ளை மழை' எப்போது கேட்டாலும், நம் உயிர்ப்பூவை திடுக்கென்று மலரச் செய்யும் அதிசயம்தான்.

உண்மையில், இந்தப் படம் வந்தபோது, ‘சின்ன சின்ன ஆசை’, ‘காதல் ரேஜாவே’ பாடல்கள்தான் திரும்பிய பக்கமெல்லம் கேட்டுக்கொண்டே இருந்தது. காரணம், ‘புது வெள்ளை மழை’ பாடலின் கம்போஸிங் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமானது. அதுவரை, அப்படியொரு ஸ்லோ மெலோடி ஸ்டைலே யாரும் கேட்டிருக்கவில்லை. எனவே, அந்தப் பாடலை பார்ப்பதும், கேட்பதும் புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்தது.

அதுமட்டுமின்றி, ஒரு புதுமணத் தம்பதியின் கூடல் கதகதப்பில் பனிப்போர்வை மூடிய காஷ்மீரின், மலைகளும், சிகரங்களும், தீக்காயும் வகையில் இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு தெருவுக்கே இரண்டு, மூன்று டிவிகள் இருந்த காலக்கட்டம், ஒட்டுமொத்த தெருவும் கூடுமிடுத்தில், இதுபோன்ற பாடல்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு அந்தநேரத்தில் பலருக்கும் கிடைத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், ரஹ்மானின் மனதுக்குப் பிடித்தமான பாடல்களின் பட்டியலில் இந்தப் பாட்டு இடம்பிடிக்க எப்போதும் தவறியதில்லை. காரணம், இப்பாடல் கேட்கும்போது ஒரு பேருந்து நிறுத்தம், பள்ளி, கல்லூரிப் பருவம், டேப் ரிக்கார்டர்கள், ஆடியோ கேஸட்டுகள், கேஸட் ரிக்கார்டிங் சென்டர், ஒரு பெண், தெரு, ஊர், திருவிழா, ஸ்பீக்கர் பாக்ஸ் என ஏதோ ஒன்றின் நினைவுகளை உங்கள் மனதின் ஆழத்தில் இருந்து கிளறவேச் செய்யும்.

(ரஹ்மான் உடன் ரெட்ரோ பயணம் தொடரும்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x