Published : 18 Feb 2025 08:54 AM
Last Updated : 18 Feb 2025 08:54 AM
சென்னை, தி.நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலக திறப்பு விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா கலந்து கொண்டனர். சூர்யா - கார்த்தி ஆகியோரின் தாயார் லட்சுமி, கட்டிடத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் சூர்யா பேசியதாவது:
அகரம் பவுண்டேஷனுக்கு என தனித்துவமான அலுவலகக் கட்டிடம் திறக்கப்படுவது நிறைவான விஷயம். தொடர்ந்து கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுக்க உத்வேகமாக இந்த கட்டிடம் அமைந்திருக்கும். அகரம் பயணத்துக்கு ஆதாரமாக இருப்பவர்கள் தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள். அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
முற்போக்கான சமூகத்தை உருவாக்க நினைக்கும் ஒவ்வொருவரோடும் இணைந்து பணியாற்ற அகரம் தயாராக இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த கட்டிடத் திறப்பு விழாவுடன் பயிற்சிப் பட்டறை, புத்தகங்கள் வெளியீடு, வாசிப்பு நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இங்கு இலவச ஆங்கில வகுப்புகள், மற்றும் அறிவுசார் நிகழ்வுகளுக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
இந்நிகழ்வுகளில் அகரம் மாணவர்கள் மட்டு மல்லாது பொதுமக்களும் முன்கூட்டியே பதிவு செய்து பங்கு பெறலாம். கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான மையமாக இந்த இடம் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு சூர்யா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT