Published : 11 Feb 2025 02:29 PM
Last Updated : 11 Feb 2025 02:29 PM
விஜய் குறித்த அவதூறு பேச்சுக்கு ரசிகர்களை கண்டித்து ரஜினி தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசஸில் (twitter spaces) விஜய் குறித்து ரஜினி ரசிகர்கள் பேசிய பதிவு இணையத்தில் வைரலானது. அதில் விஜய் மீது முட்டையை வீச வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் பேசியிருந்தார்கள். இது வைரலானது மட்டுமன்றி சர்ச்சையையும் உருவாக்கியது. இதை வைத்து ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையவழி சண்டையைத் தொடங்கினார்கள்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில், “ரஜினிகாந்தின் ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகர் விஜய்க்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கது. இத்தகைய கருத்துகள் ஏற்க முடியாதவை. மேலும் உண்மையான ரஜினி ரசிகர்கள் யாரும் இப்படிபட்ட செயலில் ஈடுபட மாட்டார்கள்.
ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இத்தகைய எதிர்மறையான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதை அல்லது பகிர்வதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பது தேவையற்ற பகைமையையும் பிளவுகளையுமே உருவாக்குகிறது.
அதே நேரத்தில், அனைத்து ரசிகர்களும் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
திரைப்படம் என்பது மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அது பிளவை ஏற்படுத்துவதற்காக அல்ல. ரசிகர் என்ற உணர்வின் பெயரில் எந்த நடிகருக்கும் அல்லது சகமனிதருக்கும் எதிராக வெறுப்பை பரப்பக் கூடாது.
நம் ரஜினிகாந்த் அவர்களின் வழியில் செயல்படும் நாம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கிடையாது, கூடாது. நாம் விரும்பும் நட்சத்திரங்களை நேசத்துடனும் நேர்மறை உணர்வுடனும் கொண்டாடுவோம். ரசிகர் பண்பாட்டை மரியாதை மற்றும் பெருமிதம் மட்டுமே நிர்ணயிக்கட்டும், துவேஷம் அல்ல.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி தரப்பில் இருந்து அவரது பி.ஆர்.ஓ ரியாஸ் அஹ்மது இதனை வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT