Published : 01 Feb 2025 08:25 AM
Last Updated : 01 Feb 2025 08:25 AM

தமிழ் இயக்குநர்களுக்கு அதிகரிக்கும் இந்தி வாய்ப்பு

தமிழ் திரைப்பட இயக்குநர்களான பீம்சிங்கில் இருந்து, கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், சமீபத்தில் அட்லி என பலர் இந்தியில் படம் இயக்கியுள்ளனர். சமீபகாலமாகத் தமிழ் இயக்குநர்களுக்கு இந்தித் திரைப்பட வாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கெனவே இந்தி சினிமாவின் டாப் ஸ்டார்களான ஆமிர்கான், அக் ஷய்குமார் நடித்த படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது சல்மான் கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

தமிழில் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் அட்லி, ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கி இருந்தார். நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடித்த இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து அவர் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்ட இந்திப் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதிலும் ராஷ்மிகா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இடத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ஆமிர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் அவர் சில படங்களை இயக்கி முடிக்க வேண்டி இருப்பதால் அதன் பிறகு அதை இயக்குவார் என்கிறார்கள்.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன், இப்போது இளையராஜா ‘பயோபிக்’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு அவர் இந்திப் படம் இயக்க இருக்கிறார். இதை டீ- சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம் ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்திப் படத்தையும் தயாரிக்க இருக்கிறது. இந்தியில் சூப்பர் ஹிட் படமான ‘ஷெர்ஷா’வை இயக்கிய விஷ்ணுவர்தன், அடுத்தும் இந்திப் படம் இயக்க இருக்கிறார்.

“தமிழ் இயக்குநர்கள் மட்டுமல்ல, தென்னிந்திய இயக்குநர்களுக்கு இந்தியில் டிமாண்ட் அதிகமாகி இருக்கிறது. தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ படத்துக்கு எதிர்மறை விமர்சனம் வந்தாலும் அந்தப் படத்தின் வசூல் ஆச்சரியம் தந்தது. அதுமட்டுமல்லாமல் இந்திப் படங்களின் படப்பிடிப்பு வருடக் கணக்காக நடப்பது வழக்கம். தென்னிந்திய இயக்குநர்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடித்துவிடுவதால் தயாரிப்பாளர்களுக்குச் செலவு மிச்சமாகிறது. தென்னிந்திய இயக்குநர்களுக்கான டிமாண்ட் அதிகரிக்க இதுவும் காரணம்” என்கிறார் இயக்குநர் ஒருவர்.

மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ், ‘தேவா’ என்ற இந்திப் படத்தை இப்போது இயக்கியுள்ளார். தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி, சன்னி தியோல்நடிக்கும் ‘ஜாட்’ என்றபடத்தை இயக்கி வருகிறார். ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம் உட்பட மேலும் சில தென்னிந்திய இயக்குநர்கள், இந்தியில் படம் இயக்க இருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x