Published : 26 Jan 2025 06:45 AM
Last Updated : 26 Jan 2025 06:45 AM

கலைமாமணி விருதை காணவில்லை: வீட்டு உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார்

சென்னை: நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டில், கடந்த 2021-ம் ஆண்டு முதல், மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு தங்கியுள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் கஞ்சா கருப்பு இங்கு தங்கியுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தார். அந்த புகாரில், கஞ்சா கருப்பு, ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார்.

மேலும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளார். மதுபானம் மற்றும் தகாதநடைமுறைகளை மேற்கொண்டு வீட்டை லாட்ஜ் போல மாற்றி விட்டார். இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார். அதேபோல், கஞ்சா கருப்பும் ஆன்லைன் வாயிலாக போலீஸில் புகார் அளித்தார்.

அதில் வீட்டின் உரிமையாளர், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். கலைமாமணி விருது, ரூ.1.50 லட்சம் உள்ளிட்டவை காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். இரு தரப்பு புகார்குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x