Published : 01 Oct 2025 07:51 AM
Last Updated : 01 Oct 2025 07:51 AM
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘கந்தாரா: சாப்டர் 1’ படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தபோது, ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் பேசினார். அப்போதுதான் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேச முடியும் என்றார். இதற்குத் தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்துகொண்டே அவர் பேசாமல் சென்றுவிட்டார் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கெனவே பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளியீட்டின் போது சில கன்னட அமைப்புகள் பெங்களூரில் எதிர்ப்புத் தெரிவித்ததையும் ஒப்பிட்டு, ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தைப் புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலை தளத்தில் உருவாக்கியுள்ளனர். இது டிரெண்டானது.
இந்நிலையில், மும்பையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிஷப் ஷெட்டியிடம் இதுபற்றி கேட்டபோது, “புதிய மொழிகளைக் கற்றுக் கொள்வதை உண்மையிலேயே விரும்புகிறேன். ஏனென்றால் நாங்கள் ஒரு இடத்துக்குச் செல்லும்போது அவர்கள் மொழியில் பேசினால் அது மரியாதையைக் காட்டுகிறது. அதனால்தான் மொழி கற்பதை எப்போதும் முயற்சிக்கிறேன். ஒரு கன்னடராக நான் பெருமை கொள்கிறேன். என் சொந்த மொழிக்கு நான் எவ்வளவு அன்பையும் மரியாதையையும் கொடுக்கிறேனோ, அதை மற்ற மொழிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை. இந்தியாவில் பல்வேறு மொழி, கலாச்சாரம். நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் அனைத்தின் மையமும் ஒன்றே. அதனால்தான் மற்றொரு மொழியைக் கற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT