Published : 23 Sep 2025 10:22 PM
Last Updated : 23 Sep 2025 10:22 PM
புதுடெல்லி: சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் மோகன்லால் தனது உரையில் கூறியிருப்பதாவது: “மலையாளத் திரையுலகின் பிரதிநிதியாக, இந்த சிறப்புமிக்க கவுரவத்தைப் பெற்ற இரண்டாவது நபர் என்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த தருணம் என்னுடையது மட்டுமல்ல. இது முழு மலையாளத் திரைப்பட துறைக்கும் சொந்தமானது. இந்த விருதை எங்கள் துறையின் மரபு, படைப்பாற்றல் மற்றும் மீள்தன்மைக்கான பலனாக நான் பார்க்கிறேன். மத்திய அரசிடம் இருந்து முதன்முதலில் இந்த அறிவிப்பை பெற்றபோது, நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மரியாதையால் மட்டுமல்ல, எங்கள் சினிமா பாரம்பரியத்தின் குரலை முன்னெடுத்துச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கியத்தாலும்.
இந்த விருதை எனது முன்னோடிகளின், மலையாள சினிமாவின் புகழ்பெற்ற மாஸ்டர்களின் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் ஆசீர்வாதமாக நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் இதை அவர்களுக்கும், மலையாளத் திரைப்படத் துறைக்கும், நமது கலையை அன்புடனும் நுண்ணறிவுடனும் வளர்த்த கேரளத்தின் விவேகமுள்ள அறிவார்ந்த பார்வையாளர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
ஒரு நடிகராகவும், திரைப்படத்துறையை சேர்ந்தவனாகவும், இந்த மரியாதை எனது உறுதியை வலுப்படுத்துகிறது. இது சினிமா மீதான எனது உறுதிப்பாட்டை ஆழப்படுத்துகிறது. மேலும் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாடு, ஆர்வம் மற்றும் நோக்கத்துடன் எனது பயணத்தைத் தொடர்வேன் என உறுதியளிக்கிறேன். இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா என்பது என் ஆன்மாவின் இதயத் துடிப்பு. ஜெய் ஹிந்த்” இவ்வாறு மோகன்லால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT