Published : 03 Jul 2025 02:03 PM
Last Updated : 03 Jul 2025 02:03 PM
அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தி’ படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காத்தி’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாவதாக இருந்த படம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 11-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது எந்தவொரு விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாத காரணத்தினால், மீண்டும் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது உறுதியாகிறது. இதற்கு படத்தன் கிராபிக்ஸ் பணிகள் முடியாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்த வெளியீடு தேதி எப்போது உள்ளிட்ட விவரங்களை விரைவில் படக்குழு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, அனுஷ்காவின் ஆக்ஷன் சம்பவமாக இந்தப் படம் இருக்கும் என்பதை உணர்த்தியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது ‘காத்தி’ திரைப்படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT