Published : 03 Jul 2025 07:00 AM
Last Updated : 03 Jul 2025 07:00 AM
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இதை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். இந்தப் படம் பெண்களுக்கு எதிரானது என்றும் ஆணாதிக்க சிந்தனை படம் முழுவதும் விரவி இருப்பதாகவும் அதிக வன்முறையை கொண்ட படம் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் இந்தப் படம் வசூலிலும் சாதனைப் படைத்தது.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அனிமல் படம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறும்போது, “ஒரு படத்தில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களையும் புகைப்பிடிக்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் சமூகத்தில் புகைப்பிடிப்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
தனிப்பட்ட முறையில் நான் திரைப்படங்களில் புகைப்பிடிக்க மாட்டேன். நான் ‘அனிமல்’ படத்தில் நடித்திருப்பதால், ஒரு திரைப்படத்தை படமாகப் பாருங்கள் என்றுதான் கூறுவேன். நான் ஒருபோதும் படம் பார்த்து பாதிப்படைய மாட்டேன். அப்படி நினைத்தால் அது போன்ற படங்களை பார்க்க வேண்டாம்.
ஒரு படத்தைப் பாருங்கள் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘கிரே’ கேரக்டர் இருக்கிறது. அப்படிப்பட்ட கேரக்டரை தான் ‘அனிமல்’ படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா காண்பித்திருந்தார். அந்த வகையில் அந்தப் படத்தை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதனால் தான் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. யாராக இருந்தாலும் படத்தை படமாக பாருங்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT