Last Updated : 29 May, 2025 08:41 PM

2  

Published : 29 May 2025 08:41 PM
Last Updated : 29 May 2025 08:41 PM

“கமல்ஹாசனை விமர்சிப்போர் கன்னட மொழிக்காக செய்தது என்ன?” - நடிகர் சிவராஜ்குமார் ஆவேசம்

பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், “கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?" என்று நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில், “கமல்ஹாசன் எப்போதும் கன்னட மொழி குறித்து உயர்வாகவே பேசுவார், பெங்களூரு குறித்து மிகுந்த அபிமானம் கொண்டவர். நமது நகரைப் பற்றி அவர் எப்போதும் பெருமையாக பேசுவார். நாங்கள் எல்லாம் அவரைப் பார்த்து வளர்ந்தவர்கள். நான் எப்போதுமே அவரின் தீவிர ரசிகன். தமிழ் நடிகரும், இயக்குநருமான அவர், கன்னட கலாச்சாரம் மற்றும் சினிமாவுக்கு தொடர்ந்து மதிப்பளித்து வருகிறார். நான் கமல்ஹாசனை பார்த்து வளர்ந்தவன். நான் அவரைக் குறித்து எவ்வாறு பெருமைப்படுகிறேன் என்றால், நான் என் தந்தையை பற்றி பெருமை கொள்வது போன்றது அது.

கேமிராக்களுக்கு முன்பு கன்னட மொழி பற்றி பெருமை பேசுவது மட்டும் போதாது. வார்த்தைகளை விட செயல் முக்கியமானது. கன்னட சினிமாவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? புதியவர்களுக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்களா? கன்னட மொழிக்கான நமது அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். கன்னட மொழிக்காக போராடவும், எனது உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

நான் பேசுவதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். எது சரி, எது தவறு என்று உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். தெளிவான பதில் கிடைக்கும். கமல்ஹாசனை பொறுத்தவரை நான் வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை. அவர் ஏற்கெனவே கன்னட சினிமாவுக்கு நிறைய பங்களித்திருக்கிறார்" என்று சிவராஜ் குமார் தெரிவித்தார்.

முன்னதாக, இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ''கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்‌ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து எறிந்தனர். சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும், கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க‌க் கூடாது எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x