Published : 03 May 2025 06:02 AM
Last Updated : 03 May 2025 06:02 AM

சர்வதேச பாக்ஸ் ஆபீஸில் இந்தியா தாக்கத்தை ஏற்படுத்தும்! - அல்லு அர்ஜுன் நம்பிக்கை

‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை, அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இதை தயாரிக்கிறது. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், தயாராகிறது” என படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்தப் படத்தின் கான்செப்ட் போட்டோஷூட் மும்பை பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோவில் கடந்த மாதம் நடந்தது. ஜூன் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன் கூறும்போது, “ஜவான் மற்றும் தென்னிந்தியாவில் சில வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிற அட்லியுடன் இதில் இணைகிறேன். அவர் சொன்ன ஐடியாவும் அவருடைய நம்பிக்கையும் எனக்குப் பிடித்திருந்தது. பல நிலைகளில் நாங்கள் ஒரேமாதிரியான எண்ணம் கொண்டவர்கள். இந்தப் படம், இந்திய சினிமாவுக்கு புதிய விஷுவல் ட்ரீட்டை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய உணர்வுகளுடன் கூடிய சர்வதேச திரைப்படமாக இது இருக்கும்.

ஹாலிவுட், கொரிய, சீன, ஈரானிய திரைப்படங்கள் என அனைத்து திரைப்படத் துறைகளும் உலக அளவில், பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், இவ்வளவு பெரிய சினிமா துறையை வைத்திருக்கிற இந்தியா, சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு இது, சரியான நேரம் என நினைக்கிறேன். இந்தியா அந்த இடத்தை அடையும் நாடாக வளர்ந்து வருகிறது. வரும் ஆண்டுகளில், இந்தியத் திரைத்துறை உலகளவில் முத்திரை பதிக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x