Published : 18 Apr 2025 08:44 AM
Last Updated : 18 Apr 2025 08:44 AM
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் சிவராஜ்குமார் பேசியதாவது: “எப்போது சென்னை வந்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும். நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே இங்கு தான். எனக்கு மலரும் நினைவுகள் இங்கு அதிகம் இருக்கிறது. நான் சென்னையில் இருந்த போது தான், எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. நான் எப்போதும் ஹீரோவாக என்னை நினைத்ததில்லை. ஹீரோ என்றால் கமல்ஹாசன் மாதிரி அமிதாப் மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள் தான் என் ஃபேவரைட். என் அப்பாவைக் கூட நான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று சொல்வதில்லை. ஆனால் கமல்ஹாசனைத்தான் சொல்வேன். அவர் அழகன். பல மேடைகளில் அவரிடமே சொல்லி இருக்கிறேன். நான் பெண்ணாக பிறந்திருந்தால் உங்களை எப்படியாவது திருமணம் செய்திருப்பேன் என்று.
நானும் சினிமாவுக்கு வந்தேன். நிறைய தோல்விகளையும், நிறைய வெற்றிகளையும் பார்த்துள்ளேன். எதையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் பல மரணங்கள், வீழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்துள்ளேன். எனக்கு தலையில் சர்ஜரி, கேன்சர் என அனைத்தையும் கடந்து வந்தேன். இந்தியா முழுக்க பல ரசிகர்கள் எனக்காக வேண்டினார்கள். இந்த இடத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தத் திரைப்படம், எனக்கு கதை சொன்னபோதே பிடித்திருந்தது. மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் அர்ஜுன்” இவ்வாறு சிவராஜ்குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT