Published : 26 Mar 2025 07:34 PM
Last Updated : 26 Mar 2025 07:34 PM
சென்னை: ‘மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்ததில் என்ன தவறு?’ என நடிகர் மோகன்லால் கூறியுள்ளார். சபரிமலையில் நடிகர் மம்மூட்டியின் இயற்பெயரில் மோகன்லால் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். இந்த ரசீது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
‘நட்பின் அடையாளம்’ என சொல்லி சிலர் மோகன்லால் செயலை பாராட்டினர். அதே நேரத்தில் ‘இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் மம்மூட்டி. அதனால் மோகன்லாலின் செயல் பெரிய குற்றம். அவர் இஸ்லாமிய மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’ என பத்திரிகையாளர் அப்துல்லா என்பவர் விமர்சித்திருந்தார். இதை சிலர் ஏற்றுக் கொண்டனர். இது சர்ச்சையானது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ‘எல்2: எம்புரான்’ பட நிகழ்வில் கலந்து கொண்ட மோகன்லால், இது குறித்து பேசியுள்ளார். “மம்மூட்டி எனது சகோதரரை போன்றவர். அதனால் அவருக்காக நான் பிரார்த்தனை செய்ததில் என்ன தவறு? மேலும், இது தனிப்பட்ட விஷயம். யாரோ வேண்டுமென்றே இதை பகிர்ந்துள்ளனர். அவர் நலமாக உள்ளார். அவருக்கு சின்ன உடல்நலப் பிரச்சினை இருந்தது. இது எல்லோருக்கும் இருப்பதை போன்றது தான். கவலை கொள்ள தேவையில்லை” என்றார்.
கடந்த 18-ம் தேதி கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மோகன்லால் சென்றிருந்தார். அப்போதுதான் மம்மூட்டிக்காக அவர் பிரார்த்தனை செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT