Published : 04 Oct 2025 06:59 AM
Last Updated : 04 Oct 2025 06:59 AM
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் என் வீட்டில் நடைபெற்ற ஒரு சிறிய சம்பவத்தை உங்களுக்கு சொல்கிறேன். என் மகள் நிதாரா வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்படி விளையாடும் போது, எதிர் தரப்பில் விளையாடும் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து குறுந்தகவல்கள் வரும். எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் ஆணா, பெண்ணா என்று பல கேள்விகள் வரும்.
அப்படி கேட்ட போது, பெண் என்று என் மகள் பதில் அனுப்பினாள். உடனே எதிர் தரப்பில் விளையாடி கொண்டிருந்த அந்த நபர், ‘உங்கள் நிர்வாண படத்தை அனுப்ப முடியுமா?’ என்று என் மகளுக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என் மகள், உடனே வீடியோ கேமை அணைத்து விட்டு, நடந்த விவரத்தை என் மனைவியிடம் கூறினாள்.
இப்படி முகம் தெரியாத நபர் குறுந்தகவல் அனுப்புவதும் சைபர் மோசடிதான். இந்தச் சூழ்நிலையில், பள்ளிகளில் 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வாரந்தோறும் ‘சைபர் மோசடி’ குறித்து பாடம் நடத்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை கேட்டுக் கொள்கிறேன். தெருவில் நடக்கும் குற்றங்களை விட இதுபோல் இணையதளத்தில் நடக்கும் குற்றங்கள் மிகப்பெரியது. இதை தடுத்து நிறுத்த வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு அக் ஷய் குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT