Published : 27 May 2025 12:29 PM
Last Updated : 27 May 2025 12:29 PM
சந்தீப் ரெட்டி வாங்கா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தீபிகா படுகோனை பற்றியது தான் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோன். அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தீபிகா படுகோன் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. நேற்று சில ஊடகங்களில், இப்படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள், சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும் கண்டிப்பாக ‘ஏ’ சான்றிதழ் தான் எனவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் தள பதிவில், “நான் ஒரு நடிகரிடம் கதையைச் சொல்லும்போது, 100 சதவீதம் நம்பிக்கையுடன் அதைச் சொல்கிறேன். எனக்கும் கதையைக் கேட்பவருக்கும் இடையே வெளிப்படையாக சொல்லப்படாத ஓர் உடன்பாடு ஏற்படுகிறது. ஆனால், உங்கள் செயலின் மூலம் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள். எனது கதையை நிரகாரித்தது மட்டுமின்றி ஓர் இளம் சக நடிகரை கீழே தள்ளிவிட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய பெண்ணியமா?
ஒரு திரைப்பட இயக்குநராக நான் என் கலைக்கு எனது பல ஆண்டுகால உழைப்பைச் செலுத்தியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை சினிமாவை உருவாக்குவது தான் எல்லாமே. அது உங்களுக்கு புரியவில்லை. எப்பவுமே புரியவும் புரியாது.
நீங்கள் இப்படி வேண்டுமானால் செய்து பாருங்கள்; அடுத்த முறை என்னுடைய முழுக் கதையையும் அம்பலப்படுத்துங்கள். அப்போது, நான் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாதவனாக இருப்பேன். நீங்கள் மோசமான வியாபார விளையாட்டை விளையாடியுள்ளீர்கள். எனக்கு இச்சூழலில் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ‘தோற்றுப்போன பூனை கோப ஆவேசத்தில் ஏதேனும் தூணைப் போய் பிராண்டிக் கொண்டிருக்குமாம்..” என்று சந்தீப் வாங்கா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT