Published : 05 May 2025 08:56 PM
Last Updated : 05 May 2025 08:56 PM
பிரபல இந்தி நடிகர் நவாஸுதின் சித்திக். இவர், தமிழில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்போது அவர் நடித்துள்ள இந்தி படமான, ‘கோஸ்டா’ (Costao). இதில் நவாஸுதின் சித்திக்குடன் பிரியா பபட், கிஷோர், ஹுசைன் தலால் என பலர் நடித்துள்ளனர். சேஜல் ஷா இயக்கியுள்ள இந்தப் படம் ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கிறது.
1990-களில் கோவாவில் சுங்க அதிகாரியாக இருந்தவர் கோஸ்டா பெர்னாண்டஸ். தங்கக் கடத்தலைத் தடுக்க முயன்ற அவர் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் புரமோஷனில் கலந்துகொண்ட நவாஸுதின் சித்திக், ‘இந்தி சினிமாவில் ஒரிஜினாலிட்டி இல்லை’ என்று கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “இந்தி சினிமாவில், கதைகளுக்கான முக்கியத்துவமும் படைப்பாற்றலும் இல்லை. அவை தென்னிந்திய திரைப்படங்களில் இருந்து நகலெடுக்கப்பட்ட கதைகளையே அதிகம் சார்ந்திருக்கின்றன. இந்தியில், கடந்த 5 வருடங்களாக ஒரே மாதிரியான கதைகள்தான் திரும்பத் திரும்ப எடுக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் மக்கள் சலிப்படைந்ததும் அதை விட்டுவிடுகிறார்கள்.
இந்தி சினிமாவில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. ஒரு ஃபார்முலா வெற்றி பெற்றால், அதைப் போன்ற படங்களையே எடுக்க முயற்சிக்கிறார்கள். அதன் 2, 3, 4-ம் பாகங்கள் என உருவாக்கப்படுகின்றன. இது நிதி திவால் போல, படைப்பு திவால் நிலை. படைப்புத் திறன் வறுமை என்றும் சொல்லலாம்.
இந்தி சினிமா ஆரம்பத்திலிருந்தே பாடல்களையும் கதைகளையும் திருடி வருகிறது. திருடுபவர்கள் எப்படி படைப்பாற்றல் கொண்டவர்களாக இருக்க முடியும்? தென்னிந்திய சினிமாவில் இருந்து அதிகம் காப்பி அடித்திருக்கிறோம். சில பிரபலமான படங்களில் இருந்தும் காட்சிகளையும் நகலெடுத்துள்ளோம். இது மிகவும் இயல்பாகிவிட்டது.
இதுபோன்ற ஒரு துறையிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? எந்த மாதிரியான நடிகர்கள் இங்கு வருவார்கள்? பிறகு நடிகர்களும் இயக்குநர்களும் நல்ல படைப்புகளைக் கொண்டு வந்த அனுராக் காஷ்யப்பைப் போல விலகத் தொடங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT