Published : 11 Aug 2025 08:09 PM
Last Updated : 11 Aug 2025 08:09 PM

நவ.1, 2-ல் ‘டெட்’ தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் அறிவிப்பு

சென்னை: இந்த ஆண்டுக்கான ‘டெட்’ தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை திடீரென அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் உடனடியாக தொடங்கியது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள் -1-ம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2-ம் நடத்தப்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக 2022-ம் டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டு காலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பணியில் உள்ள ஆசிரியர்களும், அரசு பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில, டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென இன்று மாலை வெளியிட்டது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டெட் தேர்வுக்கான கல்வித்தகுதி மற்றும் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நவம்பரில் தேர்வு: டிஆர்பி அறிவிப்பின்படி, டெட் தாள்-1 தேர்வு நவம்பர் 1-ம் தேதியும், தாள்-2 தேர்வு நவம்பர் 2-ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. தாள்-1 தேர்வுக்கு இடைநிலை ஆசிரியர்களும், தாள்-2 தேர்வுக்கு பிஎட் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண்ணும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி எஸ்டி) 150-க்கு 82 மதிப்பெண்ணும் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

டெட் தேர்வில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் எஸ்டி வகுப்பினருக்கு மதிப்பெண் தளர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் டெட்தேர்ச்சிக்கு 150-க்கு 60 மதிப்பெண் (40 சதவீதம்) பெற்றால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. டெட் தேர்வுக்கு உரிய கல்வித்தகுதியுடைய ஆசிரியர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் செப்டம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x