Published : 24 Jul 2025 05:34 AM
Last Updated : 24 Jul 2025 05:34 AM
சென்னை: மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில், புதிய பாடத் திட்டத்தில் காலணி உற்பத்தி தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கே.முரளி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்த நிறுவனம் 67 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது காலணி தொடர்பான பயிற்சி வகுப்புகள் புதிய பாடத்திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் காலணி ஏற்றுமதியில் முதன்மையாய் இருப்பதற்கு, மத்திய காலணி பயிற்சி மையமும் ஒரு காரணம். தமிழகத்தின்தோல் மற்றும்தோல் அல்லாத காலணி துறையில் கிட்டதட்ட ரூ.12,100 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளது.
திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, கரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தோல் அல்லாத காலணிகள் தொழிற்சாலைகள் வரவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 250 முதல் 300 பேர் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் இருந்து பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர். ஆனால், தற்போதைய தேவை 10 மடங்கு அதிகமாக உள்ளதால், இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
நைக், பூமா, அடிடாஸ், மற்றும் ஸ்கெச்சர்ஸ் போன்ற உலகளாவிய பிராண்டுகள் தென்னிந்தியாவில் உற்பத்தி அலகுகளை அமைப்பதால், தமிழ்நாட்டிற்கு மட்டும் 2025-26 மற்றும் 2026-27 நிதியாண்டில் காலணி துறையில் சுமார் 1.35 லட்சம் திறமையான தொழிலாளர்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 10 சதவீத தேவை தொழில்நுட்ப மேலாண்மைப் பணிகளுக்கானது. இதனால், நமது நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT