Published : 16 Jun 2025 07:25 AM
Last Updated : 16 Jun 2025 07:25 AM
சென்னை: கிண்டியில் வெஜ் - கிரேவி, ஃப்ரூட் சாலட் உணவு வகைகளை தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ஜூன் 18-ம் தேதி (புதன்கிழமை) விதவிதமான வெஜ் - கிரேவிகள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர், பன்னீர் டிக்கா மசாலா, தால் மக்னி, ரொமாலி ரொட்டி, நாண் பரோட்டா, மலாய் கோஃதா, தவா சப்ஜி, ரெட் கிரேவி, ஒயிட் கிரேவி, ஆலு மேத்தி உள்ளிட்டவற்றை தயாரிக்க கற்றுத்தரப்படும்.
இதேபோல், ஜூன் 19-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் பலவகையான சூப் மற்றும் சாலட் வகைகளை தயாரிக்கும் பயிற்சியில் தக்காளி சூப், கிளியர் காய்கறி சூப், ஸ்வீட்கார்ன் சூப், பார்லி காய்கறி சூப், கேரட் மல்லி சூப், முருங்கைக்காய் சூப், கீரை சூப், கிரீன் சாலட், ரஷ்யன் சாலட், வெள்ளரிக்காய் சாலட், கேபெஜ் சாலட், ஃரூட் சாலட், முளைகட்டிய பயிர் சாலட் ஆகியவற்றை தயாரிக்க செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.
தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், சுயஉதவிக் குழுவினர் என அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT