Published : 29 Apr 2025 03:55 PM
Last Updated : 29 Apr 2025 03:55 PM
சென்னை: ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், யுபிஎஸ்சி, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சிக்கு இன்று (ஏப்.29) முதல் விண்ணப்பிக்கலாம், என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் 2023-ல் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2024-2025ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையில், யுபிஎஸ்சி, ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, ‘நான் முதல்வன் SSC மற்றும் RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை’ தொடங்கவுள்ளது. இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மே 31-ம் தேதி அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.
இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, இன்று (ஏப்.29) முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் மே.13 கடைசி தேதியாகும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT