Published : 26 Apr 2025 01:32 PM
Last Updated : 26 Apr 2025 01:32 PM
திருப்பூர்: குரூப் 1 முதலாவது மாதிரித் தேர்வு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று நடந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்.1-ம் தேதி வெளியிடப்பட்டது. முதல் நிலைத்தேர்வு வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி வனப்பாதுகாவலர் உள்ளிட்ட 70 பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் துணை ஆட்சியர் பணியிடம் மட்டும் 28 ஆகும்.
இதையொட்டி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் கடந்த ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான போட்டித் தேர்வர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு முன்பாக மற்ற மாவட்டங்களில் இல்லாத வகையில் தொடர்ச்சியாக போட்டித்தேர்வுகள் போன்றே மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவதால், திருப்பூரில் அதிகளவிலான போட்டித்தேர்வர்கள் கடந்த காலங்களில் பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றனர்.
அதை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த குரூப் 1 முதலாவது மாதிரித் தேர்வில் 83 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இவர்களுக்கு முறையாக மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, தேர்வு கண்காணிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT