Published : 20 Apr 2025 11:45 AM
Last Updated : 20 Apr 2025 11:45 AM
சார்ஜாவில் பணியாற்ற டெக்னீசியன்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணியாற்ற, ஸ்டீல் ஸ்ட்ரக்சுரல் ஃபேப்ரிகேட்டர், சிஎன்சி லேசர் கட்டிங் மெஷின் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், போர்க் லிப்ட் மற்றும் ஜேவிசி ஆபரேட்டர், பிரெஸ் டால் மற்றும் ஷீட் மெட்டல் டை மேக்கர், மார்க்கெட்டிங் இன்ஜினீயர், புரொடக்சன் இன்ஜினீயர் , ஏசி டெக்னீசியன் உட்பட பல்வேறு தொழில்நுட்ப பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
பதவிக்கு ஏற்ப கல்வித் தகுதி ஐடிஐ தேர்ச்சி, பாலிடெக்னிக் டிஎம்இ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்சம் 6 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியத்துடன் உணவு, இருப்பிட வசதி ஆகியவையும் உண்டு.
மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு செல்வோர் விசா கிடைத்த பின்னர் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்த வேண்டும். உரிய கல்வித் தகுதியும் பணி அனுபவமும் உடைய ஆண்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்ப படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இப்பணிகளுக்கான நேர்காணல் மே 3, 4 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள (பேருந்து நிலையம் அருகில்) ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 95662 39685 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT