Published : 24 Mar 2025 03:08 PM
Last Updated : 24 Mar 2025 03:08 PM
கோவை: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர், கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை ராணுவ ஆட்தேர்வு அலுவலகம், இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
2025 ஏப்ரல் 10-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். அக்னிவீர் பொது பணியாளர், அக்னிவீர் தொழில் நுட்பம், அக்னிவீர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி (10-ம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் தொழிலாளி (8-ம் வகுப்பு தேர்ச்சி) விண்ணப்பதாரர்கள் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனைக்கான நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளிலிருந்து 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
என்சிசி, ஐடிஐ, பாலிடெக்னிக், டிப்ளோமா முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.நுழைவுத்தேர்வு (சிஇஇ) தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும்.முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு (சிஇஇ) நடைபெறும். தொடர்ந்து ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.இந்த ஆட்சேர்ப்பு முறையே முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது. மோசடி செய்யும் ஏஜென்ட்டுகளிடம் ஏமாற வேண்டாம்.
மேலும் விவரங்களுக்கு, www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT