Published : 19 Nov 2025 12:02 AM
Last Updated : 19 Nov 2025 12:02 AM
புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடை யிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடையும் தருவாயில் இருப்பதாக மத்திய அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது: இந்திய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் சந்தை அணுகல் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதோடு, இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத வரி தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
இந்திய பொருட்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரி விதிப்பு, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பு என மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவுடனான பரஸ்பர வர்த்தக பேச்சுவார்த்தை இதுவரை 6 சுற்றுகள் நடந்து முடிந்துள்ளன. இரு கட்டங்களாக பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வர்த்தக பேச்சுவார்த்தையில் ஒரு கட்டம் முடிய இன்னும் சில காலங்கள் பிடிக்கும். மற்றொரு கட்ட பேச்சுவார்த்தையில்தான் பரஸ்பரம் 25 சதவீத வரிவிதிப்புக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் அந்த ஒப்பந்தம் அர்த்தமற்றதாகி விடும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT