Published : 18 Nov 2025 07:40 AM
Last Updated : 18 Nov 2025 07:40 AM
கோவை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஓராண்டுக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.74 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதால், மத்திய அரசு இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்று தங்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், நகை தயாரிப்புத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: கரோனா தொற்றுப் பரவலுக்கு பின்னர் தங்கத்தின் விலை உலக அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை கடந்த வியாழக்கிழமை ரூ.93,840-ஆக இருந்தது. சனிக்கிழமை ரூ.91,840-ஆகவும், திங்கள்கிழமை (நேற்று) ரூ.91,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றும், ஒரு டிராய் அவுன்ஸ் (31.10546 கிராம் தங்கம்) 6,500 அமெரிக்க டாலர் வரை உயரும் என்றும் அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓராண்டுக்குள் உயர வாய்ப்பு: அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு பவுன் விலை ரூ.1.74 லட்சம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு தங்கத்தின் மீது தற்போது விதிக்கும் இறக்குமதி வரி 6 சதவீதத்தை 2 சதவீதமாகவும், ஜிஎஸ்டி வரிவிதிப்பை 3 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோவை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தங்க நகை தொழில் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT