Published : 16 Nov 2025 12:17 AM
Last Updated : 16 Nov 2025 12:17 AM
புனே: இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தில் உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் கூறினார்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் புனே நகரில் 100 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ள கார் உற்பத்தி ஆலையில் அனைத்து ரக பெட்ரோல், டீசல்
கார்களுடன், மின்சார கார்களும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணிபுரியும் 800 பேரில் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள். இந்நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் செய்திாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 50,000 சொகுசு கார்கள் விற்பனையாகும் நிலையில், அதில் 20 ஆயிரம் கார்கள் பென்ஸ் கார்களாகும். எங்கள் நிறுவனம் செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
சொகுசு கார்களின் விலை கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருந்தாலும், விற்பனையும் அதிகரித்து வருகிறது, குறிப்பாக, பெண் வாடிக்கையாளர்கள் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர். பென்ஸ் நிறுவன சேவை மையங்கள், வாடிக்கையாளர் வீட்டில் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் மின்சார கார்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கி.மீ. வரை இயக்கலாம். ஜிஎஸ்டி மறுசீரமைப்புக்குப் பின்னர் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, டீசல் கார்கள் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களிலும் விற்பனை அதிகரித்து வருகிறது. அண்மையில் கோவையில் விற்பனை மையம் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் எஸ்யுவி ரக கார்களைவிட செடான் ரக கார்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT