Published : 14 Nov 2025 09:52 AM
Last Updated : 14 Nov 2025 09:52 AM
சென்னை: இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்களுக்கு விருதை அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கலந்துகொண்டு இந்தியாவின் பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த முதல் 10 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அசெஞ்சர் சொல்யூஷன்ஸ், ஆக்ஸா எக்ஸ்.எல், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ், இஒய், கேபிஎம்ஜி, மாஸ்டர் கார்டு, ஆப்டம் குளோபல் சொல்யூஷன்ஸ், புராக்டர் அண்ட் கேம்பிள், டெக் மஹிந்திரா, விப்ரோ ஆகிய 10 நிறுவனங்களின் சார்பில் அவற்றில் பணிபுரியும் பெண்கள், அவதார் குழுமத்தின் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து அவதார் குழுமத்தின் நிறுவனர் சவுந்தர்யா ராஜேஷ் கூறியதாவது: இந்திய பணியிடங்களில் உள்ளடக்கத்தை யதார்த்தமாக்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு அவதார் தோற்றுவிக்கப்பட்டது. பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குவதன் மூலம் அவற்றை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
புதிய சாதனையாக சிறந்த நிறுவனங்களுக்கிடையே தலைமைப் பதவிகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் முதல் முறையாக 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த பெண் ஊழியர்களின் பங்கேற்பு 36 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, 2016-ல் 25 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது வேலைகளை மறுவடிவமைப்பு செய்வதில் ஏஐ முக்கிய பங்காற்றி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT