Published : 14 Nov 2025 05:52 AM
Last Updated : 14 Nov 2025 05:52 AM
சென்னை: பஞ்சாபில் தொழில் தொடங்க 5 நாட்களில் அனுமதி வழங்கப்படும் எனவும், பஞ்சாபின் புதிய தொழில் கொள்கை 2026-ல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் சஞ்சீவ் அரோரா, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
‘பஞ்சாப் இன்வெஸ்ட்’ முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா பங்கேற்று, பஞ்சாப் மாநிலத்தின் தொழில் வாய்ப்புகள், அரசின் புதிய கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சாதகமான சூழல் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து, தமிழக தொழிலதிபர்களை பஞ்சாபில் முதலீடு செய்ய வருமாறும் அழைப்பு விடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் முதலீடு செய்ய மிகச் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகும். தகவல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர், உற்பத்தி, ஜவுளி, உணவு பதப்படுத்தும் தொழில் என எந்தத் துறை சார்ந்த தொழிலும் பஞ்சாபில் சாத்தியம்.
மேலும், அண்மையில் கொண்டுவந்த வர்த்தக உரிமைச் சட்டத்தின்கீழ், பஞ்சாபில் முதலீடு செய்யும் பசுமை மற்றும் சில ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு அனைத்து அனுமதிகளும் 5 நாட்களில் வழங்கப்படுகிறது. தொழில் பூங்காக்களுக்கு வெளியே அமைக்கப்படும் ஆலைகளுக்கு 15 நாட்களிலும், விரிவாக்கத் திட்டங்களுக்கு 18 நாட்களிலும் அனுமதி வழங்கப்படும்.
பஞ்சாபில் 2022 முதல் இதுவரை ரூ.1.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில், வர்தமான் ஸ்டீல்ஸ் ரூ.2,500 கோடி, ஹேப்பி ஃபோர்ஜிங்ஸ் ரூ.1,000 கோடி, ஃபோர்டிஸ் மருத்துவமனை ரூ.1,000 கோடி, ஐஓஎல் ரூ.1,400 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.
சென்னையில் முருகப்பா குழுமம், டிவிஎஸ் மோட்டார்ஸ், வோர்ட் யுஎஸ், பவன் சைபர் டெக், ஹட்சன், கேவின் கேர், குருடே மற்றும் டாக்டர் அகர்வால் மருத்துவமனை நிர்வாகத்தினரைச் சந்தித்தோம். இவர்கள் அனைவரும் பஞ்சாபில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். பஞ்சாபில் 2035-ம் ஆண்டு வரையிலான மின்தேவையை இப்போதே திட்டமிட்டு வருகிறோம்.
மேலும், தொழிலதிபர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரை அடிப்படையில் ஒரு புதிய தொழில் கொள்கையை உருவாக்கி வருகிறோம். இந்த புதிய கொள்கை 2026 ஜனவரி மாதத்துக்குள் வெளியிடப்படும். இது இந்தியாவின் மிகச் சிறந்த தொழில் கொள்கையாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், பஞ்சாப் இன்வெஸ்ட் தலைமை செயல் அதிகாரி அமித் தாக்கா, இணை தலைமை செயல் அதிகாரி ஜஸ்ப்ரீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT