Published : 24 Oct 2025 07:38 AM
Last Updated : 24 Oct 2025 07:38 AM
புதுடெல்லி: ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளைத் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயற்சி செய்தும் போரை நிறுத்த இயலவில்லை. இந்த நிலையில், அமெரிக்க கருவூல துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (ஓஎப்ஏசி), ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லூகாயில் மீது தடை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நிதி அளித்து வருவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. ரோஸ்நெப்ட் நிறுவனம் மட்டும் உலகளாவிய அளவில் 6 சதவீதத்தையும், ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் பாதியையும் கொண்டுள்ளது.
2022-ம் ஆண்டு உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை மேற்கத்திய நாடுகள் நிறுத்திக்கொண்டுள்ளன. அதேநேரம், அதிக தள்ளுபடிகளை பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்திய தனியார் துறை நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரோஸ்நெப்டின் நயாரா எனர்ஜி ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாங்கி வருகின்றன. இந்த தடைவிதிப்பால் இந்த இரு நிறுவனங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதேநேரம், மத்திய அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்), மங்களூர் சுத்திகரிப்பு -பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், எச்பிசிஎல்-மிட்டல் எனர்ஜி (எச்எம்இஎல்) நிறுவனங்களும் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்கின்றன.
ஆனால், அரசுக்கு சொந்தமான இந்த சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரோஸ்நெப்ட் அல்லது லூகாயிலுடன் எந்த ஒப்பந்தத்தையும் கொண்டிருக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT