Published : 23 Oct 2025 01:48 AM
Last Updated : 23 Oct 2025 01:48 AM
புதுடெல்லி: ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய விமானப் படைக்கு ரஷ்யாவிடமிருந்து 5 எஸ்-400 வான் தடுப்பு ஏவுகணை தொகுப்பை வாங்க கடந்த 2018-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இதுவரை 3 ஏவுகணை தொகுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, உக்ரைன் போர் காரணமாக மற்ற 2 ஏவுகணைகளை விநியோகம் செய்வது தாமதமாகி வருகிறது. தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை இந்தியாவில் சுதர்சன சக்ரம் என அழைக்கப்படுகிறது.
இதற்கு நடுவே, கடந்த மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தானின் வான் வழி தாக்குதலை எஸ்-400 வான் தடுப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக விண்ணிலேயே தாக்கி அழித்தன. குறிப்பாக பாகிஸ்தானின் 5 முதல் 6 போர் விமானங்கள் மற்றும் ஒரு உளவு விமானத்தை 300 கி.மீ. தொலைவில் வரும் போதே சுட்டு வீழ்த்தியது.
இந்த சூழ்நிலையில் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “இந்தியாவின் வான் தடுப்பு திறனை மேம்படுத்துவதற்காக கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 வான் தடுப்பு ஏவுகணை தொகுப்புகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தன.
ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு விமானப்படை கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரஷ்யாவிடமிருந்து எஸ்-500 ஏவுகணை (தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும்) தொகுப்பு, வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வாங்குவது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது. இதுதவிர, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை மற்றும் அதன் அடுத்த தலைமுறை வகைகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT