Published : 19 Oct 2025 01:40 AM
Last Updated : 19 Oct 2025 01:40 AM
புதுடெல்லி: இந்தியாவின் 2 என்எம் சிப் உலக சந்தையை புரட்டிப் போடும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: தரவுகள் (டேட்டா) என்பது தற்போது கச்சா எண்ணெய்க்கு இணையாகவும் தரவு மையங்கள் (டேட்டா சென்டர்கள்) என்பது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளாகவும் கருதப்படுகின்றன. தற்போது டேட்டா மற்றும் டேட்டா சென்டர்களே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இந்தத் துறையில் இந்தியா முன்வரிசையை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக உள்நாட்டு செமி கண்டக்டர் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் 7 நானோ மீட்டர், 5 நானோ மீட்டர் செமி கண்டக்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 2 நானோ மீட்டர் (என்எம்) செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தியாவில் 2 என்எம் சிப் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிப் உலக சந்தையை புரட்டிப் போடும். உலகத்தின் ஒட்டு மொத்த சிப் வடிவமைப்பாளர்களில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள். எனவே இந்தத் துறையில் இந்தியா சாதனை படைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2023-ம் ஆண்டில் இந்திய செமி கண்டக்டர் துறையின் சந்தை மதிப்பு ரூ.3.17 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 2024-ம் ஆண்டில் ரூ.3.75 லட்சம் கோடியாகவும் நடப்பாண்டில் ரூ.4.17 லட்சம் கோடியாகவும் அதிகரித்து உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT