Published : 15 Oct 2025 12:29 AM
Last Updated : 15 Oct 2025 12:29 AM
புதுடெல்லி: ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
இதன் தொடக்க விழாவில் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு உலக பொருளாதாரம் படிப்படியாக மீட்சி அடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு வருகின்றனன. குறிப்பாக டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது.
மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் டிஜிட்டல்மயம் சாத்தியமற்றது என்று உலக நாடுகள் கூறி வந்தன. அந்த கூற்றை,இந்தியா பொய்யாக்கி உள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் வெற்றிகரமாக ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இந்திய அரசு மிகப்பெரிய சீர்திருத்தத்தை அமல்படுத்தி உள்ளது. அந்த நாட்டில் 12%, 28% வரி வரம்புகள் நீக்கப்பட்டு உள்ளன. ஜிஎஸ்டி வரி கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இவை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதேநேரம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு காணப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. இது பெரும் சவாலாக உருவெடுக்கக்கூடும். இவ்வாறு ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT