Published : 14 Oct 2025 09:17 PM
Last Updated : 14 Oct 2025 09:17 PM
கோவை: கோவையில் ஒரு சவரன் தங்கம் ஜிஎஸ்டி சேர்த்து இன்று (அக்.14) ரூ.98,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது. வழக்கமாக ஒரு நாளுக்கு ஒரு முறை விலையில் மாற்றம் (ஏற்றம் அல்லது இறக்கம்) காணப்படும் நிலையில் சமீப நாட்களாக தினமும் இரு முறை விலையில் மாற்றம் காணப்படுகிறது. பெரும்பாலும் விலை உயர்வே காணப்படுகிறது. கோவையில் எட்டு கிராம் கொண்ட ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை (3 சதவீத) ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இன்று ரூ.98,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் பெற்ற தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோவை காட்டூர் பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தில் பணியாற்றும் தனசேகர், காந்திபுரம் துணிக்கடையில் பணியாற்றும் பார்வதி, கணபதியில் உள்ள குறுந்தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் செல்வராஜ் ஆகியோர் கூறியது: ”தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. புத்தாடை, இனிப்பு, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
இருப்பினும் சிறிய அளவிலாவது தங்க நகைகளை வாங்குவதை வாடிக்கை. ஆனால்ம் இந்த ஆண்டு தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் தங்க நகைகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விலை தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டால் எங்களை போன்ற ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கூறினர்.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறும்போது, ”தங்கத்தின் விலை தினசரி இரண்டு முறை மாற்றம் காணப்படுவது புதிதல்ல. ஏற்கெனவே கடந்த காலங்களில் இதுபோன்று நடந்துள்ளது. பண்டிகை காலத்தில் இவ்வாறு விலை உயர்ந்து வருவதால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பண்டிகை கால சலுகையாக தங்கம் இறக்குமதிக்கு விதித்துள்ள 6 சதவீத வரியை 2 சதவீதமாகவும், தங்க நகைகளுக்கு விதிக்கப்படும் 3 சதவீத ஜிஎஸ்டி வரியை 1.5 சதவீதமாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு சவரனுக்கு ரூ.3,500 வரை குறையும். இதனால் பண்டிகை காலத்தில் மக்கள் சிறிதளவு தங்க நகைகளை வாங்க மிகவும் பயன் தரும். இதுகுறித்து சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று கூறினார்.
ரூ.95,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சென்னையில் இன்று பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.245 உயர்ந்து, ரூ.11,825 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.1,03,200 ஆக இருந்தது. இதன்மூலம், வரலாறு காணாத புதிய விலை உச்சத்தை தொட்டது.
இதுபோல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. தொழில்துறையில் வெள்ளி தேவை அதிகரிப்பால், அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206 ஆகவும், கட்டி கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து, ரூ.2,06,000 ஆகவும் இருந்தது. செப்.30-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000 ஆக இருந்தது. இது தற்போது (அக்.14) ரூ.2,06,000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.45,000 வரை உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT