Published : 10 Oct 2025 07:47 AM
Last Updated : 10 Oct 2025 07:47 AM

மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து

மும்பை: இந்​தியா வந்​துள்ள இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மரும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது இங்​கிலாந்​திலிருந்து ரூ.4,155 கோடி​யில் மார்லெட் ஏவு​கணை​களை வாங்​கு​வதற்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் 2 நாள் அரசு முறை பயண​மாக நேற்று முன்​தினம் மும்பை வந்​தார். அவருடன் 125 பேர் அடங்​கிய குழு​வும் இந்​தியா வந்​துள்​ளது. இந்​நிலை​யில், மும்​பை​யில் உள்ள மகா​ராஷ்டிர ஆளுநர் மாளி​கை​யில் இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மரும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, ரூ.4,155 கோடி​யில் இங்​கிலாந்து ஏவு​கணை​களை வாங்​கு​வது உட்பட பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தா​யின.

இந்த சந்​திப்​புக்​குப் பிறகு வெளி​யிடப்​பட்ட கூட்​டறிக்​கை​யில், “இங்​கிலாந்​திட​மிருந்து மார்லெட் இலகுரக பல்​நோக்கு ஏவு​கணை​களை வாங்க ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இது இந்​தி​யா​வின் வான்​வழி பாது​காப்பு திறனை மேலும் வலுப்​படுத்​தும். மேலும் சுய​சார்பு இந்​தியா திட்​டத்​தின் அடிப்​படை​யில், இந்​திய பாது​காப்பு அமைச்​சகத்​தின் தற்​போதைய மற்​றும் எதிர்​கால தேவை​களை பூர்த்தி செய்​யும். இந்த ஒப்​பந்​தத்​தால் வடக்கு அயர்​லாந்​தில் 700 பேருக்கு வேலை கிடைக்​கும்” என கூறப்​பட்​டுள்​ளது.

மேலும் கடற்​படை கப்​பல்​களுக்​கான மின்​சா​ரத்​தில் இயங்​கும் இயந்​திரங்​கள் தொடர்​பான ஒத்​துழைப்பை மேம்​படுத்​து​வது தொடர்​பாக​வும் இரு நாடு​களுக்​கிடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இந்த சந்​திப்​புக்​குப் பிறகு இரு​வரும் கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்​தனர். அப்​போது பிரதமர் மோடி கூறும்போது, “இங்​கிலாந்​தைச் சேர்ந்த 9 பல்​கலைக்​கழகங்​கள் இந்​தி​யா​வில் கிளை​களை நிறு​வும். இது இந்​திய மாணவர்​களுக்கு மகிழ்ச்சி அளிக்​கும் செய்தி ஆகும். இரு நாடு​களுக்​கிடையே வளர்ந்து வரும் உறவு, சர்​வ​தேச ஸ்திரத்​தன்மை மற்​றும் பொருளா​தார முன்​னேற்​றத்​துக்கு முக்​கிய தூணாக விளங்​கும்” என்​றார்.

இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் கூறும்​போது, “இரு நாடு​களும் புதிய கூட்​டாண்​மையை உரு​வாக்கி வரு​கின்​றன. இது எதிர்​காலத்​தை​யும் அதனால் உரு​வாகும் வாய்ப்​பு​களை​யும் மைய​மாகக் கொண்​ட​தாகும்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x