Published : 08 Oct 2025 10:34 AM
Last Updated : 08 Oct 2025 10:34 AM
சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன்பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.6) பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை - அக்.8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் நகை விலை அடிக்கடி புதுப்புது உச்சங்களைத் தொட்டுவரும் சூழலில் அக்.20 தீபாவளியை ஒட்டி தங்கம் விலை எந்த உச்சத்தைத் தொடுமோ என்று நகை வாங்குவோர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1400 உயர்ந்துள்ளது.
இந்த வாரம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை நிலவரம்:
அக்.8 (புதன்) - ஒரு பவுன் ரூ.90,400
அக்.7 (செவ்வாய்) - ஒரு பவுன் ரூ.89,600
அக்.6 (திங்கள்) - ஒரு பவுன் ரூ.89,000
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT