Published : 29 Sep 2025 10:07 AM
Last Updated : 29 Sep 2025 10:07 AM
சென்னை: இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (செப்.29) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்வதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இதேபோல வணிகத் துறை நிறுவனங்கள் பல உற்பத்தி மற்றும் முதலீடு சார்ந்து வெள்ளி முதலீடு மற்றும் கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு மின்சார பொருட்களின் வடிவமைப்பு பணிகளில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதோடு உலக நாடுகளும் வெள்ளியை அதிகளவில் முதலீடு செய்து வருவதும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.85,120 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தங்கம் விலை மீண்டும் 85,000 ரூபாயை கடந்து ஒரு பவுன் ரூ.85,120 என விற்பனையானது. இந்த சூழலில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சமடைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,700-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.85,600-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.93,376-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவன் ரூ.70,880-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல இன்று வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.1 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1,60,000-க்கு விற்பனை ஆகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT