Published : 20 Sep 2025 12:04 AM
Last Updated : 20 Sep 2025 12:04 AM

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்ததால் அதானி குழும பங்குகளின் விலை எழுச்சி

மும்பை: அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்ததை தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழுமப் பங்குகளின் விலை ஒரு சதவீதம் முதல் 13 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.

அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையான முறையில் அதிகரித்ததாகவும், கணக்கு வழக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஜனவரியில் குற்றம்சாட்டியது. இதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்தது.

இந்நிலையில், அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி முற்றிலும் நிராகரித்து. எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று செபி தெரிவித்துள்ளது.

செபியின் இந்த அறிவிப்பு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்ததால், அதானி பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, அதானி குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு வெள்ளிக்கிழமை ஒரே வர்த்தக தினத்தில் மட்டும் 69,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றம் கண்டது.

அதன்படி, அதானி டோட்டல் காஸ் பங்கின் விலை 7.35%, அதானி என்டர்பிரைசஸ் பங்கின் விலை 5.04%, அதானி பவர் 12.40%, அதானி போர்ட்ஸ் 1.09%, அதானி கிரீன் எனர்ஜி 5.33%, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 4.70% ஏற்றம் கண்டன.

‘ஆழமான விசாரணைக்குப் பிறகு ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது. அதானி குழுமம் விதிமுறைகளை மீறி செயல்படவில்லை’ என்று செபி அறிவித்ததை அடுத்து, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களிடையே கிடைத்த அதிக வரவேற்பு காரணமாக, அதானி குழும பங்குகள் புதிய எழுச்சி கண்டுள்ளன.

இதனிடையே, “ஹிண்​டன்​பர்க் அறிக்கை ஆதா​ரமற்​றது என்​பதை செபி​யின் ஆழமான விசா​ரணை உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. அதானி குழுமம் எப்​போதும் வெளிப்​படைத்​தன்​மை, நேர்மை ஆகிய​வற்றை கடைபிடித்து வரு​கிறது” என அ​தானி குழும தலைவர்​ கவுதம்​ அதானி ரியாக்ட் செய்ததும் கவனிக்கத்தக்கது.

அதானி நிறுவனம் Vs மவுஹா மொய்த்ரா: பங்குகளின் விலையை செயற்கையான முறையில் அதிகரித்தது உள்ளிட்ட முறைகேடுகளை செய்ததாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023-ல் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்திலும் இருந்து, அதானி குழுமத்தை இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி விடுவித்த நிலையில், அதனை கிண்டலடிக்கும் வகையில், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

“ஆஹா. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அதானி குழுமத்தை செபி விடுவித்துவிட்டதா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே” என்று நகைச்சுவையாக அவர் பதிவிட்டிருந்தார்.

அதானிக்கு செபி நற்சான்றிதழ் வழங்கியதை நம்பமுடியவில்லை என்ற மஹுவா மொய்த்ராவின் பதிவுக்கு அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் ராபி சிங் உடனடியாக எதிர்வினையாற்றினார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்புக்குரிய எம்.பி. அவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான துர்கா பூஜை வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், “அதானி குழுமம் மீதான 22 குற்றச்சாட்டுகளில் செபி நற்சான்று வழங்கியிருப்பது வெறும் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே என்பதால், எஞ்சிய குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து கோணங்களிலும் ‘மதானி முறைகேடு’ தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று காங்கிரஸ் சார்பில் ரியாக்ட் செய்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

அதானி விவகாரம்: மத்திய அரசு அதிரடி - அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி நிராகரித்ததும், அதன் தாக்கத்தால் அதானி குழும பங்குகளின் விலை எழுச்சி கண்டதும் ஒரு பக்கம் இருக்க, இந்த விவகாரத்தில், டெல்லி வடமேற்கு மாவட்ட நீதி​மன்​றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றும் கவனிக்கத்தக்கது.

அ​தானி குழு​மம் பல்​வேறு முறை​கேடு​களில் ஈடு​படு​வ​தாக அமெரிக்​காவை சேர்ந்த ஹிண்​டன்​பர்க் நிறு​வனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்​றம்சாட்​டி வெளியிட்ட அறிக்​கையை மைய​மாக வைத்து பல்​வேறு ஊடகங்​களில் செய்​தி​கள், கட்​டுரைகள் வெளி​யிடப்​பட்​டன.

இவற்றை எதிர்த்து அதானி எண்​டர்​பிரைசஸ் சார்​பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதனை விசா​ரித்த நீதிபதி அனுஜ் குமார் சிங் பிறப்​பித்த இடைக்​கால உத்​தர​வில், அதானி குழு​மத்துக்கு எதி​ரான அவதூறு செய்​தி​களை
வெளி​யிட தடை விதிக்​கப்​பட்​டது.

டெல்லி நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் சம்​பந்​தப்​பட்ட ஊடகங்​களுக்கு மத்​திய தகவல் - ஒலிபரப்​புத் துறை சார்​பில் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்டது. அதில், 138 யூடியூப் வீடியோக்​கள், 83 இன்​ஸ்​டாகி​ராம் பதிவு​களை உடனடியாக நீக்க வேண்டும் என அதிரடியாக உத்தர​விடப்​பட்டது. இதை எதிர்த்து செய்​தி​யாளர்​கள் தரப்​பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதி​மன்​றத்​தில் மேல்முறை​யீடு செய்யப்பட்டுள்​ளது.

இந்த விவ​காரம் தொடர்​பாக எடிட்​டர்ஸ் கில்டு ஆப் இந்​தியா சார்​பில் வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில், ‘இந்த உத்​தரவு செய்​தி​யாளர்​கள், ஊடக நிறு​வனங்​களுக்கு எதி​ராக உள்​ளது. நீதி​மன்ற உத்​தரவை அடிப்​படை​யாக வைத்து சமூக வலைத்தள பதிவு​களை நீக்க மத்​திய அரசு உத்​தர​விட்டுள்​ளது. இது கருத்து சுதந்​திரத்​துக்கு எதி​ரானது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x