Published : 14 Sep 2025 07:21 AM
Last Updated : 14 Sep 2025 07:21 AM
புதுடெல்லி: பிஹாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி ஆலையை நிறுவப் போவதாக அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதானி பவர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹார் மாநிலத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக அம்மாநில மின் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன்படி, ரூ.26,482 கோடி மதிப்பில் பாகல்பூர் மாவட்டம் பிர்பைன்ட்டியில் அனல் மின் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்படும். இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிஹார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கட்டுமானப் பணியின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்ததும் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். நாட்டின் மிகப்பெரிய அனல் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அதானி பவர், 18,110 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களைக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT