Published : 09 Sep 2025 10:28 AM
Last Updated : 09 Sep 2025 10:28 AM
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.81,200-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க எண்ணியிருந்தோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மேலும் உயர்ந்து, நாள்தோறும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.
அந்த வகையில், கடந்த 6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னரும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. 22 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.81,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து, ரூ.10,150-க்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.140 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1.40 லட்சமாகவும் இருந்தது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
“சர்வதேச அளவில் டாலர் மதிப்பு, தங்கம் விலை உயர்ந்திருப்பதால் உள்நாட்டிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், ஆபரணத் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது” என்கின்றனர் வர்த்தகர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT