Published : 03 Sep 2025 11:29 AM
Last Updated : 03 Sep 2025 11:29 AM
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.3) புதிய உச்சம் தொட்டுள்ளது. அதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78,000-ஐ கடந்து நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதுடன், தங்கத்தில் முதலீடும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஆக.8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760 என்ற உச்சத்தை அடைந்தது.
பின்னர், ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில், தங்கத்தின் விலை கடந்த ஆக.25-ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி, வரலாற்றில் முதல்முறையாக ஆக.29-ம் தேதி தங்கம் பவுன் விலை ரூ.76 ஆயிரத்தை கடந்து நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்து பவுன் ரூ.77 ஆயிரத்தை முதல்முறையாக எட்டியது. இந்நிலையில் இன்று (செப்.3) தங்கம் விலை ரூ.78 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொடர்ந்து இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,805-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.78,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் வெகு விரைவில் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT