Published : 03 Sep 2025 12:51 AM
Last Updated : 03 Sep 2025 12:51 AM

சிட்டி யூனியன் வங்கிக்கு ஊரகப் பகுதிகளில் 50% கிளைகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு

சென்னை: மக்கள் அதிகம் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு 50 சதவீத கிளைகள் உள்ளன என்று குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்மு பாராட்டு தெரி​வித்​தார்.

சிட்டி யூனியன் வங்​கி​யின் 120-வது ஆண்டு நிறைவு​ விழா சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு தலைமை விருந்​தின​ராக பங்​கேற்று தொடங்கி வைத்​து, வங்கியின் ஆண்​டு மலரை வெளி​யிட்​டார்.

தொடர்ந்து விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நம்​நாட்​டின் வளர்ச்​சிக்கு வங்​கி​கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றன. வங்​கி​கள் பங்​களிப்பு நிதி பரிவர்த்தனையோடு மட்​டும் நிற்​காமல் பல்​வேறு வகை​களில் விரிவடைந்து வரு​கின்​றன.

இதுத​விர நாட்​டின் நிலை​யான வளர்ச்​சிக்​கும் தூண்​டு​கோலாக உள்​ளன. வளர்ந்து வரும் இந்​தி​யா​வில் வங்கி வசதி​கள் குறை​வாக உள்ள ஊரகப் பகு​தி​களில்​தான் அதிக மக்​கள் வசிக்​கின்​றனர். சிட்டி யூனியன் வங்​கி​யின் 50 சதவீத கிளை​கள் ஊரகப்​ பகு​தி​களில் இருப்பது பாராட்டத்தக்கது. ஒருங்​கிணைந்த நிதி வளர்ச்​சிக்​காக பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது. பிரதமரின் ஜன்​தன் யோஜனா திட்​டம் மூலம் 56 கோடி பேருக்கு வங்​கிக் கணக்கு தொடங்​கப்​பட்​டது. நேரடி நிதி​யுத​வி, மானி​யம் உட்பட பல்​வேறு நலத்​திட்​டங்​கள் இடையூறு இன்றி பயனாளி​களுக்கு செல்​வதன் மூலம் டிஜிட்​டல் பொருளா​தா​ரம் வளர்ச்சி பெற்​றுள்​ளது.

விவ​சா​யிகள் முன்​னேற்​றம், ஊரகப் பொருளா​தார மேம்​பாடு ஆகிய​வற்​றுக்​கு​தான் வங்​கி​கள் முன்​னுரிமை அளிக்க வேண்​டும். சரி​யான நேரத்தில் கடன், நிதி கையாள்​வது பற்றிய அறி​வு, விவ​சா​யம் குறித்த நவீன தொழில்​நுட்​பம் ஆகியவற்றை அளிப்​ப​தன் மூலம் வேளாண் தொழிலை நிலை​யான லாபம் மற்​றும் வளர்ச்​சிப் பாதைக்கு கொண்டு செல்லமுடி​யும்.

அதே​போல், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​களும் பொருளா​தார வளர்ச்​சிக்கு மிக​வும் உதவு​கின்​றன. அந்த நிறு​வனங்​கள் வளர்ச்​சி​யின் இயந்​திர​மாக மாறு​வதற்கு வங்​கி​கள் உதவ வேண்​டும். பிரதமரின் சாலை​யோர வியா​பாரி​கள் நலத்​திட்​டம் மூலம் அவர்​களின் நிதி​ஆதா​ரம் மேம்பட்​டுள்​ளது. 2030 மார்ச் மாதம் வரை இந்த திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. முந்​தைய ஆண்​டு​களை போல் அல்​லாமல், தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் வங்கி சேவை​கள் இன்று ஊரகப் பகு​தி​களில் உள்ள சிறு விவ​சா​யிகள், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு மிகுந்த பலனளிக்​கிறது. நமது வங்​கி​கள் பின்​தங்​கிய மற்​றும் புறக்​கணிக்​கப்​பட்ட மக்​களுக்கு சிறப்பு நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். விவசாயிகளுக்கு எளி​தாக கடன் கிடைக்க வழி​செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: நாட்​டின் வளர்ச்​சிக்கு தனி​யார் வங்​கி​கள் முக்​கிய பங்​காற்றி வரு​கின்​றன. இந்​திய அட்​ட​வணை வர்த்தக வங்​கி​கள், தங்​களின் சொத்து தரத்​தில் மிகப் பெரிய முன்​னேற்​றத்​தைப் பதிவு செய்​துள்​ளன. 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்​டில் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. 18 ஆண்​டு​களுக்கு பிறகு நீண்​ட​கால கடன் வளர்ச்சி சிறப்பாக உள்​ளது. கடந்த 8 ஆண்​டு​களில் இல்​லாத அளவில் பணவீக்க விகிதம் குறைந்​து, கடந்த ஜூலை​யில் 1.55 சதவீதத்தை எட்​டி​யுள்​ளது. வருங்​கால வைப்பு நிதி​யகம்​(EPFO) ஜூன் மாதத்​தில் இது​வரை இல்​லாத அளவுக்கு சுமார் 22 லட்​சம் புதிய உறுப்​பினர்​களை சேர்த்​துள்​ளது.

மக்களின் வாங்கும் திறன் உயர்வு: இதுத​விர, பொது​மக்​களின் வாங்​கும் திறன் 17 ஆண்​டு​களில் இல்​லாத மிக உயர்ந்த நிலையை எட்​டி​யுள்​ளது. இந்​தி​யா​வின் நிதி​நிலை தொடர்ந்து மேம்​பட்டு வரு​கிறது. வரு​வாய் பற்​றாக்​குறை 4.4 சதவீத​மாகக் குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மத்​திய அரசின் நிதி கட்​டமைப்​பில் ஏற்​றத்​தாழ்வு ஏற்​பட்​டாலும், தொழிற்​சாலைகளின் வளர்ச்சி மற்​றும் வேலை​வாய்ப்​பு​கள் சிறப்​பாக உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த மாத இறு​திக்​குள் சீர்​திருத்​தம் செய்​யப்​பட்ட ஜிஎஸ்டி அறி​விப்​பு​கள் வெளி​யாகும். இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் இன்றும், நாளை​யும் ​(செப்​. 3, 4) நடை​பெற உள்​ளது. அதனடிப்​படை​யில் மக்​களுக்கு நேரடி​யாக கூடு​தல் சலுகைகள் கிடைக்​கும் வகை​யில் ஜிஎஸ்​டியில் திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, சமூக நலத்​துறை அமைச்​சர் கீதா ஜீவன், சிட்டி யூனியன் வங்​கி​யின் மேலாண்மை இயக்​குநரும் தலைமை செயல் அதிகாரியுமான என்​.​காமகோடி, அலு​வல்சாரா தலை​வர் ஜி.ம​காலிங்​கம் மற்​றும் முக்​கிய பிர​முகர்​கள் பலர் கலந்​து​கொண்டனர்.

முன்​ன​தாக 2 நாள் தமிழக சுற்​றுப்​பயணத்தை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு சென்​னைக்கு நேற்று வந்​தார். சென்னை வி​மான நிலை​யத்​தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் தாமோ அன்​பரசன், தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், பொறுப்​பு டிஜிபி வெங்​கட்ராமன்​ உள்​ளிட்டோர் வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x