Published : 29 Aug 2025 06:50 AM
Last Updated : 29 Aug 2025 06:50 AM
புதுடெல்லி: பருத்தி இறக்குமதி மீதான வரிவிலக்கை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு மத்திய அரசு 11 சதவீத இறக்குமதி வரி விதித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிக்கப்படும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிக்கும் நோக்கில் பருத்தி மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் 30 வரை மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இந்நிலையில் இந்த வரிவிலக்கு இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜவுளி ஏற்றுமதியாளர்களை மேலும் ஆதரிக்கும் நோக்கில் பருத்தி (எச்எஸ் 5201) மீதான இறக்குமதி வரி விலக்கை செப்டம்பர் 30, 2025 முதல் டிசம்பர் 31, 2025 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5 சதவீத அடிப்படை சுங்க வரி, 5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி மற்றும் இந்த இரு வரிகள் மீதா 10 சதவீத சமூக நல கூடுதல் வரி என மொத்தம் 11 சதவீத இறக்குமதி வரியிலிருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த வரிவிலக்கு நூல், துணிகள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்திக்கான செலவுகளை குறைக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உற்பத்தி செலவு குறைவதன் மூலமும் ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பதன் மூலமும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியப் பொருட்களின் போட்டியிடும் திறன் மேம்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT