Published : 25 Aug 2025 06:39 AM
Last Updated : 25 Aug 2025 06:39 AM
சென்னை: கோயம்பேடு சந்தையில் கடந்த மே மாதம் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.15-க்கும் குறைவாக விற்கப்பட்டு வந்தது. ஜூன் மாத பிற்பகுதியில் தக்காளி விலை உயரத் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து நேற்று (ஆக.24) கிலோ ரூ.40 வரை விற்கப்பட்டது. திருவல்லிக்கேணி ஜாம் பஜார், சைதாப்பேட்டை காய்கறி சந்தை உள்ளிட்ட சில்லறை விற்பனை காய்கறி கடைகளில் கிலோ ரூ.60 வரை விற்கப்படுகிறது.
அதேபோல், கடந்த மே மாதம் கிலோ ரூ.40 வரை சரிந்திருந்த முருங்கைக்காய் நேற்றைய நிலவரப்படி மேலும் சரிந்து கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டது. முட்டை கோஸ் விலையும் நேற்று கிலோ ரூ.5 ஆக வீழ்ச்சி அடைந்திருந்தது. கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.50, அவரைக்காய் ரூ.40, பச்சை மிளகாய் ரூ.30, பாகற்காய் ரூ.25, கேரட், சாம்பார் வெங்காயம் தலா ரூ.20. வெங்காயம் ரூ.17, புடலங்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா ரூ.15, பீட்ரூட், வெண்டைக்காய், நூக்கல், முள்ளங்கி தலா ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா, ஆந்திரா மாநில பகுதிகளி்ல் இருந்துதான் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வருகிறது. அப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதனால் தக்காளி உற்பத்தி குறைந்து, விலை உயர்ந்துள்ளது. செப்டம்பர் 3-வது வாரத்துக்கு மேல் விலை குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT