Published : 19 Aug 2025 06:34 AM
Last Updated : 19 Aug 2025 06:34 AM

ஜிஎஸ்டி வரியை குறைக்க திட்டம்: கார், மொபைல்போன், கணினி விலை குறையும்!

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்​திய நிதி​யமைச்​சகம் திட்​ட​மிட்டு உள்​ளது. இதன்​படி கார், மொபைல்​போன், கணினி உள்​ளிட்ட பொருட்​களின் விலை கணிச​மாக குறை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 15-ம் தேதி டெல்லி செங்​கோட்​டை​யில் சுதந்​திர தின உரை​யாற்​றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும் என்று அறி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. பிரதமர் மோடி​யின் அறி​விப்​பின்​படி இனிமேல் 5%, 18% என்ற இரு வரி அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும். சில ஆடம்பர பொருட்​களுக்கு மட்​டும் 40% வரி விதிக்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஆட்டோ மொபைல் துறை வளரும் வரி குறைப்பு குறித்து மத்​திய நிதி​யமைச்சக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தற்​போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு நடை​முறை​யில் 90 சதவீத பொருட்​கள் 28 சதவீத வரி வரம்​பின் கீழ் உள்​ளன. இந்த பொருட்​கள் அனைத்​தும் 18 சதவீத வரி வரம்​பின் கீழ் கொண்டு வரப்​படும். இதன்​படி கார், பைக், சிமென்ட், ஏசி, வாஷிங் மெஷின், மொபைல்போன், கணினி உள்​ளிட்ட பெரும்​பாலான பொருட்​கள் 18 சதவீத வரம்​பின் கீழ் வரும். மின்​சார வாக​னங்​களுக்கு தற்​போது 5 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இந்த வரி விதிப்​பில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது.

ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும்​போது நாடு முழு​வதும் கார், பைக்​கு​களின் விற்​பனை கணிச​மாக அதி​கரிக்​கும். ஆட்டோ மொபைல் சந்தை அபார வளர்ச்சி அடை​யும். தற்​போது பழச்​சாறு, உலர்ந்த பழங்​கள், தயிர், நெய் உள்​ளிட்ட பொருட்​களுக்கு 12 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இவற்​றின் மீதான வரி 5 சதவீத​மாக குறைக்​கப்​படும்.

வீடு​கள் விலை குறை​யும்: சிமென்ட் உள்​ளிட்ட கட்​டு​மான பொருட்​கள் மீது தற்​போது 28 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இவை 18 சதவீத வரி வரம்​பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இதன் மூலம் கட்​டு​மான செலவு குறை​யும். வீடு​களின் விலை​யும் குறை​யும்.

நாடு முழு​வதும் வீட்டு வசதித் துறை அபார வளர்ச்சி அடை​யும். சுகா​தார சேவை​கள் மற்​றும் ஆயுள் காப்​பீடு பிரிமி​யம் உள்​ளிட்​ட​வற்​றுக்கு தற்​போது 18 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இவை 5 சதவீத​மாகக் குறைக்​கப்​படும். இதன்​மூலம் சுகா​தா​ரத் துறை, காப்​பீடு துறை மட்டுமல்லாமல் ஜவுளி துறை அபார வளர்ச்சி அடை​யும். இவ்வாறு மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விலை குறை​யும் பொருட்​கள்: உணவு வகைகள், காய்​க​னிகள் மற்​றும் மக்​கள் அன்​றாடம் பயன்​படுத்​தும் அத்​தி​யா​வசிய பொருட்​கள் அனைத்​தும் 5 சதவீத வரி வரம்​புக்கு கீழ் கொண்டு வரப்​படும். மேலும் மொபைல் போன்​கள், கணினிகள் உள்​ளிட்ட மின்​ணனு சாதனங்​கள், மருந்​துகள், உரங்​கள், வேளாண் விளைபொருட்​கள், கைவினை பொருட்​கள், சைக்​கிள் ஆகிய​வற்​றின் விலை​யும் கணிச​மாக குறை​யும்.

குறிப்​பாக ரூ.1,000-க்கு உட்​பட்ட ரெடிமேட் ஆடைகள், காலணி​கள் ஆகிய​வற்​றின் விலை 7 சதவீதம் வரை குறை​யும். ரூ.80,000 மதிப்​புக்கு உட்​பட்ட டிவி மற்​றும் மின்​னணு பொருட்​களின் விலை ரூ.8,000 வரை குறைய வாய்ப்பு இருக்​கிறது. இதே​போல ரூ.40,000 மதிப்​புள்ள பிரிட்ஜ் உள்​ளிட்ட வீட்டு உபயோக பொருட்​களின் விலை ரூ.4,000 வரை குறைய வாய்ப்​பிருக்​கிறது. தங்​கம், வெள்ளி நகைகளுக்கு தற்​போது 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்​கப்​படு​கிறது. இந்த வரி விதிப்​பில் எந்த மாற்​றம் செய்​யப்​ப​டாது.

விலை உயரும் பொருட்​கள்: புகை​யிலை பொருட்​கள், மது​பானங்​கள், ஆன்​லைன் விளை​யாட்டு மற்​றும் ஆடம்பர பொருட்​களுக்கு மட்​டும் 40 சதவீத வரி விதிக்​கப்​படும். சொகுசு கார், விலை உயர்ந்த பைக்​கு​களும் இந்த வரி வரம்​பின் கீழ் கொண்டு வரப்​படும். சுருக்​க​மாக சொல்​வதென்​றால் பணக்​காரர்​கள் பயன்​படுத்​தும் ஆடம்பர பொருட்​கள் மற்​றும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்​கும் போதை பொருட்​கள் அனைத்​துக்​கும் 40 சதவீத வரி விதிக்​கப்​படும்.

ஜிஎஸ்டி வரி விகித மாற்​றத்​தின்​போது போலி நிறு​வனங்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழி​வகை செய்​யப்​படும். கடந்த ஆண்டு போலி நிறு​வனங்​கள் மூலம் ரூ.1,000 கோடி வரை மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது. இதை தடுக்க அதிதீ​விர நடவடிக்கை எடுக்​கப்​படும். இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி வி​தித்​திருப்​ப​தால் பல்​வேறு பொருளா​தார சவால்​கள் எழுந்து உள்​ளன. இந்த சூழலில் ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் உள்நாட்டு சந்தை அபரிதமிதமான வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x