Published : 08 Aug 2025 05:25 AM
Last Updated : 08 Aug 2025 05:25 AM
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.75,200-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.58 ஆயிரமாக இருந்தது.
பின்னர், போர் பதற்றம் உள்பட பல காரணங்களால், தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஜூலை 23-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,040 என்ற உச்சத்தை அடைந்தது. பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.75,200-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.9.400-க்கு விற்கப்பட்டது. ஆக.2 முதல் 7-ம் தேதி வரை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
24 காரட் சுத்த தங்கம் ரூ.82,032-க்கு விற்கப்பட்டது. சென்னை தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ‘‘இந்தியா வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்துள்ளார்.
இதன் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.87.50-ஆக சரிந்துள்ளது. இதனால், உள்நாட்டு சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பவுன் ரூ.80 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT